• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா …

Byகுமார்

Aug 4, 2022

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.பக்தர்கள் ஏராளமான பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரைக்கு வடக்கே அழகர் மலை அடிவாரத்தில் அமைய பெற்றதும், திருமாலிருஞ்சோலை என்றும் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படும் புனித ஸ்தலமான அழகர்மலை கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான ஆடிப்பெரும் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி உள்ளது.அழகர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று காரணமாக ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வருடம் அரசின் தளர்வுகள் , விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இக்கோவிலில் கொடி ஏற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியது.விழாவை முன்னிட்டு முன்னதாக கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்கார விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்களுடன் கோவிந்தா கோஷம் முழங்கிட ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் அழகர் மலை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஆடிப்பெரும் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை அடுத்து தினமும் சுவாமிகள் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமார் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி கோவில் உள்பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 12 ம் தேதி வெள்ளிக்கிழமையன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4 .35 மணிக்குள் அருள்மிகு சுந்தர்ராஜா பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருள்கிறார் .. தொடர்ந்து காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கள்ளழகர் திருக்கோவில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதாலும், முக்கிய விழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதாலும் கோவில் நிர்வாகம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் , துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் , பணியாளர்கள் செய்து வருகின்றனர் .