உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இலவசமாகவும், மாணிய விலையிலும் 51 குடும்பங்களுக்கு ஆடு, மாடுகளை வழங்கி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஊக்கப்படுத்தினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சிக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் 70 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
மலைக்கு சென்று தேன், கிழங்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து வாழ்வாதாரத்தை வளர்த்து வரும் இந்த மக்களின் வருவாயை பெருக்கவும், வாழ்வாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் 14 குடும்பங்களுக்கு ஆடுகள், 16 குடும்பங்களுக்கு பசுமாடுகள் இலவசமாகவும், 21 குடும்பங்களுக்கு பசுமாடுகள் தாட்கோ மூலம் மாணிய விலையிலும் வழங்கும் விழா மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
ஆடு, மாடுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் ஆடு, மாடுகளை வழங்கியுள்ளதாகவும், சரியாக பயன்படுத்தி வருவாயை பெருக்குவதோடு, குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மலைவாழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து இந்த மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர், மலைவாழ் மக்களின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்து நலம் விசாரித்த சம்பவம் அம்மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.