மதுரை மாவட்டம் , பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில் குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, மடத்தில் கும்ப கலசங்களை வைத்து அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, மேளதாளம் முழங்க அங்குள்ள மாலை விநாயகர் கோவிவில் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் , மடத்திற்கு சென்று கும்ப கலசத்துடன் மகாலிங்க சுவாமிக்கு தீர்த்த அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து, அதே பரிவாரங்களுடன் பெரிய மடம் சென்று அங்கும் தீர்த்த அபிஷேகங்களும் பஜனைகளும் நடந்தது. மடத்தின் முன்புள்ள வளாகத்தில் சாதுக்களுக்கு சொர்ணதானம், வஸ்திரதானம், அறுசுவை உணவு அன்னதானம், வழங்கப்பட்டது.

இதில் ராமேசுவரம், திருவண்ணாமலை, சுவாமிமலை, சதுரகிரி, கொல்லிமலை, சங்ககிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து இரு நூற்றுக்கும் மேற்பட்ட சாதுக்கள் முன்னதாகவே வந்திருந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்து கமிட்டியின் தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் கிராம மக்கள் செய்திருந்தனர்.
