பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறியதற்கு தந்தை மீது வழக்குபதிவு செய்ததால் மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியைச் சேர்ந்தவர் நந்தன். இவரின் மகன் குப்புசாமி (36) சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை பெற்ற நந்தன் வீட்டிற்கு சென்று பார்த்த போது அதில் உள்ள புளியில் பல்லி இறந்து இருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ரேஷன் கடை ஊழியரிடம் சென்று முறையிட்டுள்ளார். மேலும், ஊடங்களுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஊடங்களில் பரவவே ரேஷன் கடை விற்பனையாளர் சரவணன் நந்தன் மீது புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பிணையில் வெளிவர முடியாத படி வழக்குபதியப்பட்டது. இதனால், நந்தனின் குடும்பம் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இந்நிலையில், நந்தனின் மூத்த மகன் குப்புசாமி திடீரென இவரது வீட்டுக்குச் சென்று அறைக் கதவை மூடிக்கொண்டு வீட்டில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவரின் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசின் பொங்கல் தொகுப்பில் குறை கூறியதற்கு வழக்கு பதிவு செய்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.