நற்றிணைப் பாடல் 135:
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில்
வரையாத் தாரம் வரு விருந்து அயரும்
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர்
இனிது மன்றம்ம தானே பனி படு
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும்
வால் உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே
பாடியவர்: கதப்பிள்ளையார்
திணை: நெய்தல்
பொருள்:
தொங்கும் ஓலைகளை உடைய பனைமரம். அதன் பருத்த அடி புதைந்திருக்கும் மணல்வெளி முற்றம். அங்கே எல்லையில்லாத புதுவருவாய்ப் பண்டங்கள் குவிந்து கிடக்கும். அவற்றை வந்த விருந்தினர்களுக்கெல்லாம் வழங்குவர். இப்படிப்பட்ட குடிமக்கள் வாழும் சிற்றூர் முன்பெல்லாம் இன்பமாக இருந்தது. பனி பொழியும் கடல்மணல் பரந்த காடு. அதன் வறட்சியைப் போக்கக் கடலலை வந்து பாயும் மணல்வெளி. அங்குக் கால் பதியும்படி குதிரை பூட்டிய தேர் வந்தது. அதில் வந்தவன் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தான். அதற்கு முன்னர்தான் ஊர் இன்பம் தந்தது. இப்போது அவன்மீது ஏக்கம். தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.