நற்றிணைப் பாடல் 136:
திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல
என்னை வாழிய பலவே பன்னிய
மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய
தலைப்பிரிவு உண்மை அறிவான் போல
நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்கு இல் பொலந் தொடி செறீஇயோனே
பாடியவர்: நற்றங் கொற்றனார்
திணை: குறிஞ்சி
பொருள்:
நான் என் வளையல் கையில் நிற்க வேண்டும் என்று அழுகிறேன். என் அன்னை ஏதோ கொடுக்கிறாள்.
பசியாகிய அரும்பிணியில் வருந்துபவருக்கு அவர் விரும்பும் உணவைக் கொடுக்காமல் மருந்தை ஆராய்ந்து தேடி உண்ணக் கொடுக்கும் மருத்துவன் போல அன்னை கொடுக்கிறாள். அன்னை பல காலம் வாழ்வாளாக. மலைநாடனுக்கும் எனக்கும் சிறிய கால இடைவெளி. அதனை மலைநாடன் அறிந்துகொண்டான் போலும். நான் விலக்கினாலும் அவன் விலகவில்லை. என் தோள் வாடிப் பழிக்கப்படுவதை மறைத்து உதவி புரிய, என் கையில் வளையல் செறிந்து நிற்க அவன் வந்திருக்கிறான். தலைவன் தனக்காகக் காத்திருப்பதை அறிந்த தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.