நற்றிணைப் பாடல் 85:
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்,
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக்
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும்,
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி
வாரற்க தில்ல தோழி! சாரல்
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை,
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே!
பாடியவர்: நல்விளக்கனார் பாடல்
திணை: குறிஞ்சி
பொருள்:
தலைவியின் காதலன் வரவை எதிர்கொள்ளச் செல்லும் தோழி தலைவிக்குச் சொல்லும் பாடல் இது.
மலர் போன்ற உன் கண்களில் பனி முத்துக்கள் தேங்கிக் கிடக்கின்றன. மூங்கில் போன்ற உன் தோள்களில் அணிகலன்கள் நழுவுகின்றன. ஊரெல்லாம் உன்னைப் பற்றிப் பேசுகின்றனர். இப்படி இருக்கும்போது என்னுடன் வராதே. நான் அச்சம் தரும் வழியில் செல்கிறேன். வரிப்புலிக்கு அஞ்சி யானை தன் கன்றைக் காத்துக்கொகொண்டிருக்கும் வழியில் செல்கிறேன், என்கிறான். அந்த உன் காதலன் மலைநாடன். அந்த மலையிலுள்ள கானவன் முள்ளம்பன்றியை வேட்டையாடிக் கொண்டுவருவான். அவன் மனைவி, கொடிச்சி தேன்மணம் கமழும் கூந்தலை உடையவள். அவள் கிழங்கைக் கொண்டுவருவாள். முள்ளம்பன்றிக் கறி, கிழங்கு இரண்டையும் அவர்கள் தம் சிற்றூர் மக்களுக்குப் பகிர்ந்து தருவார்கள். அப்படிப்பட்ட மலைநாட்டுக்குத் தலைவன் அவன். உன்மேல் ஆசை கொண்டவன். கவலைப்படாதே என்று தோழி தலைவிக்குச் சொல்கிறாள்.