மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தேசிய மக்கள் கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும். வாடகை வீட்டுக்காரர்களுடைய ஆதாரை இணைத்தால் அவர்கள் காலி செய்த பின் புதிதாக வருபவர்களின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். ” என்று அவர் கூறியிருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளர்கள் ஆதார் எண்ணை மட்டும் இணைக்க முடியும் என்பதால் அரசு மானியம் வாடகைதாரர்களுக்கு கிடைக்காது. ஆதார் இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலை பெறவில்லை’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ‘வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகை தாரருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை. மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும். அனைத்து ஒப்புதலை பெற்ற பிறகு ஆதார் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதிகள், “இந்த வழக்கு தகுதி இல்லாத வழக்கு; அடிப்படை முகாந்திரம் இல்லாத வழக்கு” எனக் கூறி, வழக்கறிஞர் ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.