• Fri. Mar 29th, 2024

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் அமைச்சர் தகவல்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வருகிற 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நடப்பு ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் மின்சார வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணிகளின் முன்னேற்றம் குறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒரு லட்சமாவது விவசாயியின் மின்சார இணைப்பு உத்தரவையும் வழங்கினார். அதேபோல் இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று முதல்வரின் வழிகாட்டுதல் படி சட்டசபையில் அறிவிக்கப்பட்டு, கடந்த மாதம் 11ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் முதல்வர் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதற்கான உத்தரவை வழங்கினார்.
தற்போது 34 ஆயிரத்து 134 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 விவசாயிகளுக்கு வருகிற பொங்கல் திருநாளுக்கு முன்பு முழுவதுமாக மின்சார இணைப்பு வழங்கப்படும். தேவையான உதிரி பாகங்கள் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. தேவை இருந்தால் அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டத்தில், 2 கோடியே 67 லட்சம் மின்சார நுகர்வோர்களில், இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்த மாத இறுதிக்குள் (வருகிற 31-ந் தேதி) மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. மின் கட்டண உயர்வால் வருவாயை ஆண்டுக்கு ரூ.19 ஆயிரம் கோடி அளவில் உயர்த்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் செலவுகளை குறைத்தபோது மாதம் ரூ.1,000 கோடி மட்டுமே கூடுதல் வருவாய் வந்துள்ளது. தற்போது ஏற்பட்ட புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.
தற்போது 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சாரம் கணக்கு எடுக்கும் அளவில்தான் பணியாளர்கள் உள்ளனர். எனவே, வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டியுள்ளது. தொடர்ந்து ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். ஒன்றரை ஆண்டுகளில் 80 சதவீதத்திற்கு மேல் முதல்வர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். மின்சார வாரியத்தை பொறுத்தவரையில், 20 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் உள்ளது. மின்சார வாரியம் தொடங்கியதில் இருந்து 2021-ம் ஆண்டு வரை 32 ஆயிரத்து 500 மெகாவாட் தான் உற்பத்தி நிலை உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 2030-ம் ஆண்டுக்குள் 65 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் அதாவது தற்போது இருப்பதைவிட இரட்டிப்பாக்கும் நிலையில் உற்பத்தி நிலையை உயர்த்துவதற்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மின்சார வாரியத்தில் கடன் நிலை, நிதி சுமை உள்ளதை மேம்படுத்தப்பட வேண்டி உள்ளது.
கடந்த ஆட்சியில் மாதம் ரூ.7 கோடிதான் வருவாய் வந்தது. சராசரியாக ஆண்டுக்கு ரூ.70 கோடி முதல் 77 கோடிதான் வருவாய் வந்தது. தற்போது ரூ.80 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதம் ரூ.7 கோடி வந்த இடத்தில் தற்போது ரூ.13 கோடியே 71 லட்சம் வருவாய் வருகிறது. வட்டியை பொறுத்தவரையில் 13 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் வட்டி மாதம் ரூ.84 கோடி குறைக்கப்பட்டு உள்ளது. செலவை குறைத்து வருவாயை பெருக்க மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் வருவாயும், செலவும் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *