திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு காசோலை மோசடி செய்த வழக்கில் வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பாக நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி 7 நாள்’ என்ற படத்தை தயாரிக்க முனைந்தார் இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி.
இந்தப் படத்தின் தயாரிப்பு பணிக்காக ‘பி.வி.பி. கேப்பிட்டல்’ என்ற நிதி நிறுவனத்திடமிருந்து 1 கோடியே 3 லட்சம் ரூபாயை கடனாக தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் பெயரில் இயக்குநர் லிங்குசாமி கடனாகப் பெற்றிருக்கிறார்.
பின்பு வாங்கிய கடனுக்காக ‘பி.வி.பி. கேப்பிடல்’ நிறுவனத்திடம் 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்துள்ளார் லிங்குசாமி. ஆனால் அந்த வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் பவுன்ஸாகிவிட்டது.இதையடுத்து ‘பி.வி.பி. கேப்பிட்டல்’ நிறுவனம் பல முறை லிங்குசாமியிடம் கடன் பணத்தை கேட்டும் லிங்குசாமி திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் வங்கியில் பணம் இல்லாதது நன்கு தெரிந்திருந்தும், ஏமாற்றும் நோக்குடன் தங்களுக்குக் காசோலையை கொடுத்து லிங்குசாமி செயல்பட்டதாக, லிங்குசாமி மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ‘பி.வி.பி. கேப்பிட்டல்’ நிறுவனம் காசோலை மோசடி வழக்கினை தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் லிங்குசாமிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதியன்று 6 மாத சிறைத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது.மேலும், ‘பி.வி.பி. கேப்பிட்டல்’ நிறுவனத்திடமிருந்து பெற்ற கடனை இயக்குநர் லிங்குசாமி வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.அந்த உத்தரவை எதிர்த்து இயக்குநர் லிங்குசாமி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, கடந்த வாரம் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்காமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குநர் லிங்குசாமிக்கு வழங்கிய தண்டனையை உறுதி செய்து, லிங்குசாமியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.