பொங்கி எழும் வெறுப்பு எனும் சுனாமியை அடுக்குவோம்.. இந்தியாவில் வெறுப்புணர்வும் பிரிவினைவாதமும் வைரஸ் நோயை போல் பரவி வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
தி இந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில், இந்தியாவில் உடை, உணவு, நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றில் இந்தியர்கள் இந்தியர்களை எதிர்த்தே போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். ஒரு பிரச்சினையை கிளப்பி அதற்கு எதிர்ப்புகள் எழுவது அவ்வப்போது நடைபெறுகிறது. ஆளும் கட்சியினர் அத்தகைய சூழலைத்தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவின் பன்முகத்தன்மைகளை ஒப்புக் கொள்வது குறித்து பிரதமர் அதிகம் பேசி வருகிறார்.
ஆனால் தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் பன்முகத்தன்மைகள் தற்போது பிளவுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சமூக நல திட்டங்களுக்கு தேவையான வருவாயை உருவாக்கவும், நமது நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெருக்கவும் பொருளாதார வளர்ச்சியை அதிகளவில் தக்க வைத்து கொள்ள வேண்டியது இன்றைய சூழ்நிலையில் கட்டாயமாகும்.
ஆனால் வெறுப்புணர்வு, பிரிவினைவாதம் உள்ளிட்டவை பொருளாதார வளர்ச்சியின் அடித்தளத்தையே அசைத்து பார்க்கிறது. கர்நாடகாவில் என்ன நடக்கிறது என்பதை சில துணிச்சலான நிறுவனங்கள் பேசுகின்றன. இது போல் தைரியமாக பேசுபவர்களுக்கு எதிராக சமூகவலைதளங்களில் எதிர்கருத்துகளும் வருகின்றன.
சமூகபிரச்சனைகள் குறித்து பேசும் சமூக ஆர்வலர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு அமைதியாக்கப்படுகிறார்கள். சமூக வலைதளங்களை குறிப்பாக பொய் மற்றும் விஷ பிரச்சாரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். பயமுறுத்துதல், ஏமாற்றுதல், மிரட்டல் ஆகியவையே தற்போதைய அரசின் வியூகமாக உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தாகூர் எழுதிய கீதாஞ்சலியில் “எங்கே மனம் பயமில்லாமல் இருக்கிறது என்ற வரிகள் இந்த அரசாங்கத்திற்கு பொருத்தமானது. .அந்த வரிகள் இன்று அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொங்கி எழும் வெறுப்பு எனும் சுனாமியை அடக்குவோம்.வைரஸ் நோயை போல பரவி வரும் வெறுப்புணர்வையும், பிரிவினைவாதத்தையும் வேரோடு அகற்றுவோம் .இவ்வாறு சோனியா காந்தி தனதுகட்டுரையில் தெரிவித்துள்ளார்.