இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை கொண்டு பிற மாணவர்களுடன் ஆரோக்கியமாக போட்டியிடும் வாய்ப்பை இந்த போட்டி வழங்குகிறது.

7வது முறையாக நடைபெறும் இந்த போட்டியின் ஒரு பிரிவாக கோவை மண்டலத்தில் உள்ள மாணவர்கள் பங்கேற்கும் வகையில் இப்போட்டிகள் நடக்கிறது. இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கத்தில் கோவை மண்டலச் சுற்று வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெரிய மேடையில் பெரிய தன்னம்பிக்கையுடன் காலடி எடுத்து வைக்க இந்தத் தளம் உதவுவதாக லீட் குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள ‘லீட்’ நிறுவனத்தின் சேவைகளில் சிறப்பாக இயங்கும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.
லீட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் திரு. சுமீத் மேத்தா கூறுகையில் :-

“இன்றைய பள்ளி கல்வியில் நாம் காணும் மிகப் பெரிய குறைபாடு திறனில் அல்ல, தன்னம்பிக்கையில்தான் உள்ளது. பல மாணவர்கள் கருத்துக்களை நன்கு புரிந்துகொண்டாலும், தங்கள் சிந்தனையை வெளிப்படுத்த, பேச, அல்லது ஒரு பெரிய மேடையில் செயல்பட வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் இவ்வளவு நாட்கள் கற்றுக்கொண்டதை ஒரு மேடையில் தன்னம்பிக்கை உடன் சோதனை செய்ய, நிஜ உலக அனுபவத்தை பெற தேசிய அளவில் ஒரு வாய்ப்பை வழங்குவதற்காகவே இப்போட்டிகள் உருவாக்கப்பட்டது,” என்று கூறினார்.
இந்த வெற்றியாளர்கள், இப்போது ஜனவரி 2026-இல் நடைபெறவுள்ள தேசியப் பெரும் இறுதிப் போட்டியில் (National Grand Finale) பங்கேற்று, இந்தியா முழுவதிலுமிருந்து வரும் சிறந்த போட்டியாளர்களுடன் போட்டியிடுவார்கள்.




