விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் ஆணையை சேலம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மின்சார வாரியத்தில் பணியின் போது உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சேலம் மற்றும் மேட்டூர் மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 50 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி உயிரிழந்த வாரிசுதாரர்கள் 25 க்கும் மேற்பட்டோருக்கு கருணை அடிப்படையில் பணி ஆணையையும் வழங்கப்பட்டது.