வரும் 15ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட உள்ள காலை சிற்றுண்டி திட்டத்திற்காக ஈரோடு மாநகராட்சியில் சோதனை அடிப்படையில் இன்று காலை உணவு வழங்கப்பட்டது.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கி, இடைநிற்றலை தவிர்க்க காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
இந்த திட்டத்துக்காக 33.56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ம் தேதி அண்ணா பிறந்தநாளையொட்டி தொடங்கி வைக்க உள்ளார். முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தை முன்கூட்டியே சோதனை அடிப்படையில் செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 26 தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை சோதனை அடிப்படையில் மாணவர்களுக்கு சுடச்சுட ரவா கேசரி, சேமியா கிச்சடி ஆகியவை வழங்கப்பட்டது..
வருகிற 15-ம் தேதி திட்டம் அமலுக்கு வர உள்ளதை அடுத்து திட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுத்துவது என்பது குறித்தும், பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் சிற்றுண்டி வந்து சேர்ந்ததா? சிற்றுண்டி தரம், சுவை, மாணவர்களின் விருப்பம், தேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.