• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமிய பெருமக்களுக்கு காயல் அப்பாஸ் ரமலான் வாழ்த்து !

ByKalamegam Viswanathan

Mar 27, 2025

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.

புனித ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்காக ஏக இறைவனான அல்லாஹுதாலாவினால் வழங்கப்பட்ட மிகப் பெரிய வெகுமதியாகும். மேலும் ஆண்டு முழுவதும் ரமலானாகவே இருக்க வேண்டும் என உம்மத்தினர் விரும்புவார்கள் என ஓர் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் ரமலான்.

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பது சிரமமான காரியம்தான் என்றாலும், புனித ரமலான் மாதத்தில் கிடைக்கின்ற நன்மைகளைக் கருத்தில் கொண்டு மனிதர்கள் அதனை விரும்புவார்கள் என்பதாக முகமது நபி(ஸல்) அவர்கள் அருளியிருக்கின்றார்கள்.ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும்… ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பதும் உள்ளத்தின் அழுக்குகளையும் , மன ஊசலாட்டங்களையும், நீக்கி விடும் என ஓர் ஹதீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பினுள் பலவிதமான நோக்கங்களும், பலன்களும், இருக்கின்றன. மார்க்கம் நோன்பை விதியாக்கி இருப்பதில் பலவிதமான பலன்கள் மனிதனுக்கு கிடைக்க வேண்டுமென்பதுதான் நோக்கம். அவை அனைத்தும் நோன்பில் பசித்திருக்கும் பொழுதுதான் கிடைக்கப் பெறுகின்றன.

அவற்றில் மிகப் பெரிய பலனாகிய மனோ இச்சயை முறியடித்தல் என்பது சிறிது நேரம் பசித்திருப்பதில் அடங்கியிருக்கிறது. ஷைத்தான் மனிதனின் உடலில் ரத்தம் போன்று ஊடுருவி சென்று கொண்டிருக்கிறான். நோன்பு கேடயமாகி ஷைத்தானின் செயல்களில் இருந்து தடுக்கும். நோன்பினால் மற்றொரு பலன் என்னவென்றால் ஏழைகள்போல் பசித்திருந்து அவர்களுடைய நிலைகளை உணர்வதாகும்.

இந்த நோக்கம், மாலை வரை பசி தெரியாமல் இருக்க ஸஹர் நேரத்தில் பால் இனிப்பு வகைகள் ஆகாரங்கள் ஆகியவற்றைக் கொண்டு குடலை நிரப்பாமல் இருப்பதில்தான் உண்டாக முடியும். ஏழைகளுக்கு ஒப்பாக இருத்தல் என்பது கொஞ்சம் நேரம் பசித்திருப்பதின் மூலமே சாத்தியமாகும்.

ஆகவே, இந்த புனிதமான ரமலான் மாதத்தில் மார்க்கத்தைக் கொண்டு நாம் நோற்ற இந்த நோன்பினையும் ஜக்காத்தினையும் நிறைவேற்றிய இஸ்லாமிய பெருமக்களுக்கும் இனிய ரமலான் நல் வாழ்த்துகளை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.