சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள், உலகளவில் அங்கீகாரங்களை பெற்று வருகின்றன.
ரஷ்ய மொழியில் விரைவில் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் சீன மொழியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், சத்யராஜ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம் கனா. சாதாரண விவசாயியின் மகள் எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதனை படைக்கிறாள் என்கிற கதையை அருமையாக எடுத்திருப்பார் அருண்ராஜா காமராஜ்.
ஐஸ்வர்யா ராஜேஷின் ஜூனியர் வெர்ஷனாக நடித்த குழந்தைகள் முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை கெளசல்யா முருகேசன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினார்கள். முருகேசனாக நடித்த சத்யராஜ் தனது பங்கினை சிறப்பாக ஆற்றியுள்ளார்..
நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமையை கொண்டு கோலிவுட்டையே கலக்கி வரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இருந்து தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்தார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸை தொடங்கி தனது நண்பர் அருண்ராஜா காமராஜை நம்பி முதலீடு செய்ய சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றியை அவர் கொடுத்தார்.
சர்வதேச அங்கீகாரத்தை பெற்று வரும் தமிழ் படங்கள் வரிசையில் கனா திரைப்படம் தற்போது சீன மொழியில் டப் செய்யப்பட்டு சீனாவில் வரும் மார்ச் 18ம் தேதி வெளியாக உள்ள அறிவிப்பை Yi Shi Films நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை இயக்குநர் அருண்ராஜா காமராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கனா படக்குழுவினர் தற்போது ஷேர் செய்துள்ளனர்.
எஸ்கே புரொடக்ஷனின் முதல் திரைப்படமான கனா திரைப்படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வரும் மார்ச் 18ம் தேதி வெளியாக போகிறது என்கிற அறிவிப்பை ரசிகர்களுடன் ஷேர் செய்வதில் ரொம்ப சந்தோஷம். கனா படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் இது பெரிய பெருமைமிகு தருணம் என சிவகார்த்திகேயன் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.