மருத்துவ பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
நடிகரும் , மக்கள்
நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து சினிமா மற்றும் பிக்பாஸ் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வந்தார். இதனையடுத்து அமெரிக்கா சென்று திரும்பிய அவருக்கு கடந்த நவம்பர் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒரு வார சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தார். அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால் கமல்ஹாசன் தொடர்ந்து விக்ரம் பட படப்பிடிப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் என பிஸியாகவே இருந்து வந்தார். இந்நிலையில் 100 நாட்காளைக் கடந்து ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் புரோமோவிலும் நடித்திருந்தார். ஒரு வழியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், நேற்று திடீரென நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும், வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது..
இந்நிலையில் பரிசோதனைகள் முடிந்து இன்று காலை 11.30 மணியளவில் கமல்ஹாசன் வீடு திரும்பியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து வரும் திங்கள் கிழமை முதல் அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.