• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வைகை ஆற்றில் பச்சைப் பட்டுடுத்தி இறங்கினார் கள்ளழகர்..!

Byவிஷா

May 5, 2023

உலக பிரசித்தி பெற்றதும், வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
நேற்று(4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருனார் காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார். ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவணி வந்தார். கோவிந்தா…கோவிந்தா… கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர். பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக்குதிரையில் வீரராகப்பெருமாள் கள்ளழகரை வரவேற்றார். முன்னதாக கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகையில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேர்ந்து வைகை ஆற்றில் இறங்குவதே ஐதீகம். புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலத்துடன் உள்ளது.