மதுரையில் தேவையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், செட்டிகுளம் கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா 2ஆவது அலையின்போதே படுக்கை வசதி, ஆக்ஸிஜன் உள்ளிட்ட தேவையான அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளையும் மேற்கொண்டு தயாராக வைத்துள்ளோம். தற்போதைய 3ஆவது அலையை எதிர்கொள்ள மதுரை மாவட்டம் தயாராக உள்ளது.
தேவையான கட்டுப்பாடுகளுடன் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிச்சயம் நடைபெறும். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையைப் பொறுத்தவரை கடந்த 2006-2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திமுக ஆட்சியில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தேவையான கட்டமைப்புகளை சிறப்பாக செய்திருந்தார். பிறகு வந்த அதிமுக ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக பல்வேறு வகையிலும் சர்க்கரை ஆலையின் பணிகள் முடங்கின. தற்போது தமிழக முதல்வர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அவையெல்லாம் சீர் செய்யப்படும் என்றார்.