ரெயில்களில் தீபாவளி பண்டிகை நெருங்கும்போது வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசுகளை மறைத்து எடுத்துச்செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுப்பதற்காக ரெயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது.. ரெயில்களில் பட்டாசு உள்ளிட்ட வெடிமருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. தடையை மீறி பட்டாசு எடுத்துச்சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு எடுத்து செல்பவர்கள் முதல்முறையாக பிடிபட்டால் ரூ.1000 அபராதம் அல்லது 6 மாதங்கள் ஜெயில் தண்டனை வழங்கப்படும். அதன்பிறகும் தொடர்ந்து இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும். பட்டாசு எடுத்து செல்வதை தடுக்க பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனையிடப்படும். மேலும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.