பிணைக்கைதிகளை விடுவிப்பதன் மூலம் காசாவில் 6 வார போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. மேற்காசிய நாடான பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலுக்குள் புகுந்து, 2023-ம் ஆண்டு, அக். 7-ல் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் இறந்தனர். நுாற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர், 15 மாதங்களாக நீடித்து வந்தது. காசாவில் 46,000 பேர் கொல்லப்பட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் கடந்த சில மாதங்களாக முயற்சித்து வந்தன.காசாவில் 15 மாதங்களாக நீடித்து வரும் போரை நிறுத்த ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “காசாவில் இதுவரை 46,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 15 மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.காசாவில் நடைபெறும் சண்டையை நிறுத்தும், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார். இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உலக தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.