• Fri. Apr 26th, 2024

இந்தியாவுக்கு இப்படியொரு பிரச்சனையா?

உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியா இதுவரை எந்த நாட்டையும் நேரடியாக ஆதரிக்காமல் நடுநிலையான முடிவை எடுத்து உள்ளது.

மேற்கு நாடுகள் எல்லாம் ரஷ்யாவை எதிர்க்கும் நிலையில் இந்தியா அந்த முடிவை எடுக்காமல் நடுநிலையோடு இருக்கிறது.. இந்தியாவின் இந்த நிலைப்பாடு வரும் காலத்தில் இந்தியாவிற்கே எதிராக திரும்பும் என்றும் உலக அரசியல் வல்லுனர்கள் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை உக்ரைன் மீது போர் தொடுப்பதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்து உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பாக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதை இந்தியா ஆதரிக்கவில்லை. இந்தியா, அமீரகம், சீனா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை

இன்னொரு பக்கம் ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவில் அவசர கூட்டம் நடத்துவதற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்கவில்லை. ஏன் ஐநா மனித உரிமை ஆணைய கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்பட்ட விவாதத்திலும் இந்தியா பங்கேற்கவில்லை. உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்தாலும் எங்கும் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை. அதே சமயம் ரஷ்யாவை வெளிப்படையாக இந்தியா ஆதரிக்கவும் இல்லை.

இந்தியாவின் இந்த நிலைப்பாடு இப்போது இந்தியாவிற்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது. இதுவரை இரண்டு பக்கத்திற்கும் இடையில் ஒருவகையான “பேலன்சை” இந்தியா கடைப்பிடித்து வந்துள்ளது. ஆனால் இந்த போர் செல்ல செல்ல இந்தியா ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், ஏனென்றால் மேற்கு உலகிற்கும் இந்தியா நட்பான நாடு, ரஷ்யாவிற்கு இந்தியா நட்பான நாடு. இதனால் இந்தியா இதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே உக்ரைன் இந்தியாவை ரஷ்யாவிடம் பேசி போரை நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்து வருகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு இதில் மறைமுக கோரிக்கை வைத்து வருகிறது. ஒருவகையில் இந்தியாவிற்கு இது ரிஸ்க் என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் சீனாவுடனான இலை பிரச்சனையில் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது குவாட்தான். அதாவது அமெரிக்கா – ஜப்பான் – ஆஸ்திரேலியா – இந்தியா அடங்கிய கூட்டணி. ஆனால் இப்போது ரஷ்யா விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா – ஜப்பான் – ஆஸ்திரேலியா மூன்றையும் கிட்டத்தட்ட பகைத்துக்கொண்டது , இதனால் குவாட் இனிமேல் இந்தியாவுடன் நிற்குமா.. அல்லது குவாட் என்ற அமைப்பு இனி உயிர்ப்புடன் இருக்குமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் இந்தியா நடுவில் மாட்டிக்கொண்டது அமெரிக்காவிற்கும் தெரியும். ரஷ்யாவையும் இந்தியா பகைக்க முடியாது என்பது இந்தியாவிற்கு தெரியும். ஆனால் அதையும் மீறி ரஷ்யாவை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் கோரிக்கையாக உள்ளது. ரஷ்யா மீது ஏற்றுமதி தடை, வர்த்தக தடை உள்ளதால் இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் விமானங்கள், எஸ் 40 ஆண்டி மிஸைல் சிஸ்டம் போன்றவற்றை வாங்குவது சிக்கலாகி உள்ளது. swift பரிவர்த்தனை இல்லாமலே எஸ் 400ஐ ரஷ்யாவிடம் இந்தியா வாங்க முடியும் என்றாலும்.. ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவிற்கும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்ததால் பெலாரஸ் நாட்டிற்கு நேற்றுதான் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. சீனா போன்ற நாடுகளுக்கும் இந்த தடை விரிவடையும். இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா இரண்டிற்கும் நடுவில் மாட்டில் உள்ளது. நடுநிலை என்ற முடிவை எடுத்து.. ரஷ்யாவையும் இந்தியா முழுமையாக ஆதரிக்கவில்லை. அதேபோல் உக்ரைனையும் இந்தியா முழுமையாக ஆதரிக்கவில்லை. இதனால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு சீனாவுடன் எல்லை பிரச்சனை வந்தால் மேற்கு உலகம் நம்முடன் நிற்குமா என்பது சந்தேகம்தான்.

அதே சமயம் சீனாவுடன் எல்லை பிரச்சனை வந்தால் ரஷ்யாவும் நம்மை ஆதரிக்க வாய்ப்பு குறைவு. இந்தியாவையே போலவே நானும் நடுநிலை என்று கூறி ரஷ்யா விலகிக்கொள்ளும். அதிலும் ரஷ்யா – சீனா இடையே நோ லிமிட் உறவு நிலவி வருகிறது. அப்படி இருக்கும் போது லடாக் போன்ற மோதல்களில் சீனாவை பகைத்துக்கொண்டு ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவாக இருக்காது. காஷ்மீர் விவகாரத்திலும் பாகிஸ்தான் புடினுக்கு இப்போது நேரடியாக ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யா இந்தியாவிற்கு ஆதரவு தருமா என்பது சந்தேகம்தான். சீனாவா.. இந்தியாவா என்று பார்த்தால் பெரும்பாலும் ரஷ்யா சீனா பக்கமே சாயும்! பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக, அரசியல் ரீதியாக சீனாவே ரஷ்யாவிற்கு க்ளோஸ்!.

இப்படி சீனாவிற்கு நெருக்கமாக இருக்கும் ரஷ்யாவை நம்பித்தான் இந்தியா சர்வதேச அரங்கில் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவை பார்த்து வரும் காலத்தில் தைவான், லடாக்கில் சீனா இதேபோல் மூக்கை நுழைக்கும். அப்போது மேற்கு உலகம் இந்தியாவுடன் நிற்குமா என்பது சந்தேகம்தான். இப்போது மேற்கு உலகை இந்தியா ஆதரிக்கவில்லை என்பதால் வரும் காலத்திலும் இந்தியாவிற்கு மேற்கு உலகின் ஆதரவு கிடைப்பது கொஞ்சம் சிக்கல்தான்.. சரியாக சொல்லவேண்டும் என்றால் பழைய நண்பன் ரஷ்யாவையும் பகைக்க முடியாமல்.. புதிய நண்பன் அமெரிக்காவையும் பகைக்க முடியாமல்.. இந்தியா நடுவில் மாட்டி இருக்கிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *