உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் காவல்துறை சார்ந்த டிஜிபி/ஐஜிக்கள் மாநாடு உ.பி. மாநிலம் லக்னோவில் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா முழுவதுமிருந்து டிஜிபிக்கள் மற்றும் ஏடிஜிபி அல்லது ஐக்ஜி அந்தஸ்து அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு, சைபர் பிரிவு ஏடிஜிபி அம்ரேஷ்புஜாரி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
2 நாள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். தமிழகத்திலிருந்து கலந்துக்கொண்ட டிஜிபி சைலேந்திர பாபுவிடம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி எப்படி இருக்காங்கன்னு பிரதமர் கேட்க பிரதமர் அளவுக்கு அவர் விவகாரம் சென்றுள்ளதையும் கண்டு டிஜிபி ஆச்சர்யப்பட்டுள்ளார். மாநாட்டிலும் பிரதமர் பேசியுள்ளார்.
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி, மழை வெள்ளத்தில் இரவு முழுவதும் கல்லறையில் மழைநீரில் கிடந்த ஓர் இளைஞரை அவசரமாக மீட்டு, தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனையில் அனுமதித்தார்.
பதற்றத்துடன் இளைஞரை தோளில் தூக்கி வைத்து ஓடுவதும் விரைவாக வண்டியில் ஏற்றி அனுப்பிய இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரியின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுமக்கள் பாராட்டை குவித்தது. ஊடகங்கள் பாராட்டி எழுதின. சிறிது நேரத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா என ராஜேஷ்வரி பேசுபொருளானார். இந்திய அளவில் ப்ருட், வயர் போன்ற மிகப்பெரிய வலைதளங்கள் அவரது செயலை பாராட்டின.
ராஜேஷ்வரியின் செயலை டிஜிபி பாராட்டினார். மறுநாள் காலை முதல்வர் நேரில் அழைத்து பாராட்டினார், ஆளுநர் ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் பாராட்டினர். சமூக வலைதளங்கள் அல்லாமல் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்களும் பாராட்டினர்.
டிஜிபியிடம் கேட்டதல்லாமல் விழாவில் பேசிய பிரதமர் இந்திய அளவில் போலீஸார் செயல்பாடுகள், தியாகம், அவர்கள் ஆற்றிய வீரஞ்செரிந்த பணிகள், மக்கள் பணி போலீஸ் முன்னுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றை பேசியுள்ளார்.
அப்போதும் தமிழகத்தில் சென்னை டிபிசத்திரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி ஒரு இளைஞரை காப்பாற்றும் எண்ணத்தில் தோளில் தூக்கிப்போட்டு துரிதமாக செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டு வாழ்த்தி பேசியுள்ளார்.
இதன் மூலம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு மத்திய அரசின் பதக்கம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.