• Tue. Feb 18th, 2025

அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற ஆட்டோ ஸ்டர்ன் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 17, 1969).

ByKalamegam Viswanathan

Aug 17, 2023

ஆட்டோ ஸ்டர்ன் (Otto Stern) பிப்ரவரி 17, 1888ல் ஜெர்மனியில் ஸோஹரா என்ற பகுதியில் யூதக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆஸ்கர் ஸ்டெர்ன் ஒரு ஆலை உரிமையாளர். மகனுக்கு இருந்த கணித மற்றும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்க அவனுக்குத் தேவையான அத்தனை நூல்களையும் அப்பா வாங்கித் தந்தார். இவருக்கு நான்கு வயதாக இருந்தபோது பெற்றோர் பி ரெஸ்லவில் குடியேறினர். அங்கேதான் பள்ளிப் படிப்பு பயின்றார். மேற்படிப்புக்கான பாடங்களைத் தேர்வு செய்ய அறிவியலின் பல துறை நூல்களைப் பயின்றார். மூலக்கூறு கோட்பாடு, வெப்ப இயக்கவியல் ஆகியவற்றில் ஆர்வம் உண்டாயிற்று. 1906ல் பிரெஸ்லவ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் வேதியியலும் பயின்றார். 1912ல் அடர் திரவங்களில் கார்பன்டை ஆக்சைடின் சவ்வூடு பரவல் குறித்து கோட்பாடு மற்றும் பரிசோதனை முறைகளில் ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பிராகா, சூரிச் பல்கலைக்கழகங்களில் இயற்பியல்சார் வேதியியலில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1919 முதல் சோதனை இயற்பியல் களத்தில் ஆர்வம் கொண்டார். பின்னர் பிராங்க்பிரட் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி மாக்ஸ் போனுடன் இணைந்து திடப் பொருள்களின் மேற்பரப்பு ஆற்றலைக் குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் வெளியிட்டார். 1923ல் ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல்சார் வேதியியலில் பேராசிரியராகப் பணியாற்றினார். வெப்ப இயக்கவியல் மற்றும் குவாண்டம் கோட்பாடு குறித்து ஆராய்ந்தார். கேர்லாக்குடன் இணைந்து காந்தப் புலங்களின் செயல்பாடுகள் மூலம் காந்தத் திருப்புத் திறனில் (magnetic moment) அணுக்களின் விலகல் குறித்து ஆராய்ந்தார். இது ஸ்டெர்ன்-கேர்லாக் சோதனை என்று குறிப்பிடப்பட்டது. புரோட்டான்கள் உள்ளிட்ட துணை அணுத் துகள்களின் காந்தத் திருப்புத்திறனை அளந்தார். ஏஸ்டர்மேனுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களையும் ஆராய்ந்து, அணுக்கள் மூலக்கூறுகளின் அலை இயல்பைக் கண்டறிந்தார்.

1933ம் ஆண்டு நாசிக்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு, இவர் ஜெர்மனியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்று அங்கு சென்றார். பிட்ஸ்பர்கில் கார்னகி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பேராசிரியராகவும், மூலக்கூறு ஆராய்ச்சிகளுக்கான ஆய்வுக்கூடத்தில் ஆய்வாளராகவும் நியமிக்கப்பட்டார். இங்கு தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்த இவர், மூலக்கூறு கோட்பாட்டில் பயன்படுத்தப்படும் அடிப்படை கருத்துருக்களுக்கான நிரூபணங்களை வழங்க வேண்டும் என்பதை உணர்ந்தார். இதற்காக மூலக்கூறு – கற்றை முறை ஒன்றை மேம்படுத்தினார். இவர் கண்டறிந்த மூலக்கூறு கற்றை முறை மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் துணை நின்றன. குறிப்பாக, வாயுக்களில் திசைவேக பங்கீடு குறித்த சோதனைகளுக்கு உதவின. 1925-1945 ஆண்டுகளில் 82 பரிந்துரைகளுடன் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டாவது நபராக அவர் இருந்தார். பெரும்பாலான நேரங்களில் பரிந்துரைக்கப்பட்டவர் 84 பரிந்துரைகளுடன் அர்னால்ட் சோமர்ஃபெல்ட். இறுதியில் அணுக்கள் மற்றும் அணு உட்கரு குறித்த ஆராய்ச்சிகளுக்கு 1943ம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்டெர்ன் கார்னகி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் கலிபோர்னியாவின் பெர்க்லிக்கு குடிபெயர்ந்தார். யு.சி. பெர்க்லியில் இயற்பியல் பேச்சுவார்த்தைக்கு வழக்கமான பார்வையாளராக இருந்தார். நோபல் பரிசை வென்ற ஆட்டோ ஸ்டர்ன் ஆகஸ்ட் 17, 1969ல் தனது 81வது வயதில், பெர்க்லி, அமெரிக்காவில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். சோதனை இயற்பியலில் சிறந்து விளங்கியதற்காக வழங்கப்பட்ட டாய்ச் பிசிகலிசே கெசெல்செப்டின் ஸ்டெர்ன்-ஜெர்லாக்-மெடெயில் அவருக்கும் ஜெர்லாச்சிற்கும் பெயரிடப்பட்டது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.