
இந்தியா காமன்வெல்த் போட்டியில் ஒரே நாளில் நான்கு பதக்கங்களை குவித்துள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.
காமல்வெல்த் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு 201 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் சங்கெத் மகாதேவ் சர்க்கார் பங்கேற்றார். 55 கிலோ பளு தூக்கும் பிரிவில் கலந்துகொண்ட அவர், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.மகளிர் பிரிவில் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி பங்கேற்றார். இதில் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்த பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் குருராஜ் பூஜாரி கலந்துகொண்டார். அவர் மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.