காந்திபுரம் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் வைரம் தங்கம் நகைகள் சுமார் 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரின் செல்போன் சிக்னல் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் ஸ்விட்ச் ஆப் ஆனதாக கண்டறியப்பட்ட நிலையில் நேற்று இரவில் இருந்து தனிப்படையில் ஒரு குழு ஆனைமலையில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தர்மபுரி மாவட்டம் ஆரூர் பகுதியை சேர்ந்தவர் என போலீசருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை குழுவினர் தர்மபுரிக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனைமலை, தர்மபுரி, உட்பட கோவையில் சில இடங்களிலும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் பட்சத்தில் கூடிய விரைவில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் பிடிப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.