ரோட்டரி கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி சார்பில் அன்னூரில் அருகே வடுக பாளையத்தில் அமைந்துள்ள டான் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்பைன் அகாடமிக்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 பேரை தங்க வைத்து சிகிச்சையளித்து பராமரிப்பதற்காக புதிய கட்டிடம் கட்டிதரப்பட்டது.
இந்த திட்டமானது தி ஐ பவுண்டேசன் டாக்டர் சித்ரா மற்றும் டாக்டர் ராமமூர்த்தி அவர்களின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதி மூலம் கட்டப்பட்டுள்ளது .
ஆன்ஸ் பவித்ரா அரவிந்த் தலைமையிலான ஆன்ஸ் கிளப், இவர்களின் சிகிச்சைக்காக 20 மோட்டார் பொருத்தப்பட்ட கட்டில்கள் வழங்கியுள்ளனர்.
இந்த திட்டமானது ரூ 30 லட்சம் செலவில் கட்டிடம் மற்றும் சமையலறை வசதிகளை புதுப்பித்தல், மேலும் 5 லட்சம் செலவில் நோயாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட கட்டில்கள், காற்று மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை உள்ளடக்கியது.
ஸ்பைன் அகாடமி ஆனது 2010 ஆம் ஆண்டு முதல் ரவிச்சந்திரன் அவர்களால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவச சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்டது. இங்கு 54 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழ் முற்றிலும் செயலிழந்து வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் சூழல் இல்லாமல் இருப்போர். இங்கு அவர்களுக்கு தங்கும் இடம் , உணவு மற்றும் சிகிச்சை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது.
ரோட்டரி டெக்ஸ்சிட்டி தலைவர் விஜயகுமார் மற்றும் செயலாளர் தேவி மாருதி ஆகியோர் திட்டத்தின் செயற்பாட்டிற்கு தலைமை மற்றும் மேற்பார்வையை வழங்கினர்.
Rtn. அரவிந்த் குமரன் திட்டத் தலைவராக பணியாற்றினார், திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் முயற்சிகளை முன்னெடுத்து 65 நாட்களில் விரைவாக கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளார் .
புதிய கட்டிடத்தின் சாவியை டான் நிர்வாக அறங்காவலரும் நிறுவனருமான ரவிச்சந்திரனிடம் ரோட்டரி மாவட்ட ஆளுநர் டி.ஆர்.விஜய்குமார் அவர்கள் முன்னிலையில் டாக்டர் ராமமூர்த்தி வழங்கினார்.