சிவகாசி நேரு சாலையில் உள்ள பிலால் திருமண மண்டபத்தின் பின் பகுதியில் சுவாமி படங்களுக்கு பிரேம் போட்டு விற்பனை செய்யும் கடையில் தீ விபத்து.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (76). இவர் நேரு சாலையில் உள்ள பிலால் திருமண மண்டபத்தின் பின் பகுதியில் உள்ள கட்டிடத்தில், இரண்டு அறைகளில் சுவாமி படங்கள் தயாரித்து அவற்றை பிரேம் போட்டு விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை, படங்கள் தயாரிக்கும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சுவாமி படங்கள் மற்றும் பிரேம் போடும் மரச்சட்டங்கள் எரிந்து சேதமாகியது. விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.