தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, கிராம சபை கூட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளரை மாற்ற கோரி கிராம பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இங்குள்ள ஊராட்சியில் ஊராட்சி செயலாளருக்கு பதிலாக அவரது மனைவி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து பணிகளை செய்வதாகவும், குடிநீர் சாக்கடை மற்றும் தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக கிராம மக்கள் ஊராட்சி மன்றத்தில் மனு அளிக்க சென்றால் ஊராட்சி செயலாளர் இல்லாமல் அவர் மனைவி பதில் அளிப்பதாகவும், இதனால் ஊராட்சி மன்றத்தில் பணிகள் முடங்கி கிடப்பதாகவும், பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டி நேற்று நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படுவதில்லை எனவும், ஆகையால் ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.