• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்:

Byவிஷா

Sep 16, 2022

நற்றிணைப் பாடல் 43:
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்,
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே,
அஞ்சல் என்ற இறை கைவிட்டென,
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்,
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயின் மன்னன் போல,
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே.

பாடியவர் எயினந்தையார்
திணை பாலை

பொருள்:

‘வெயிலின் மிகுதி விளங்கிய வெப்பத்தை உடைய மலைப் பக்கமானது, வெண் துகிலினை விரிந்து மூடியிருந்தாற் போலத் தோன்றும், கோடை நீடிய அத்தகைய குன்றத்தின் பக்கத்தே, பசியினாலே தளர்ந்துபோன செந்நாயானது, கோடைக் காற்றானது வாடியிருந்த மரையாவைக் கொன்று தின்று, தன் பசி தீர்ந்தது. அங்ஙனம் தின்ற பின் எஞ்சிக் கிடந்த மிச்சம், நெடுந்தொலைவிடத்து நாட்டினைக் குறித்தவராகக் கடத்தற்கரிய அச்சுர நெறியிலே செல்லும் பயணிகளுக்கு உணவாகப் பயன்படும்.’ என்று தோழி கூறுகிறாள். இங்கு செந்நாய் தின்று கழித்த மரையாவின் ஊன் வழிச் செல்வார்க்கு உணவாகும் என்பது ‘நீ நுகர்ந்து கைவிட்டதனால் இவளது மேனியிற் எழிலைப் பசலை நோய் பற்றி உண்ணும்’ என்பதை உணர்த்துகிறது.