நற்றிணைப் பாடல் 294:
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,
படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,
உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்
பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்
குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,
”எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்
கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு
இரும் புலி வழங்கும் சோலை,
பெருங் கல் வைப்பின் சுரன் இறந்தோரே?
பாடியவர்: காவன் முல்லைப் பூதனார்
திணை: பாலை
பொருள்:
அழகு பொம்மும் கூந்தலை உடையவளே! வானம் மின்னி, சிறிய பனிக்கட்டிகளுடன் பெரிய அளவில் மழை பொழிந்திருக்க்கிறது. பெரிய பிளவு-வாயைத் திறந்துகொண்டிருக்கும் மலையில், பெண் உழைமான் உரசும்போது குமிழம் பழமானது, மகளிர் அணிகலனில் உள்ள காசுகள் கொட்டுவது போலக், கொட்டும். அந்தக் குன்றப் பாதையில் என்னோடு வருகிறாயா என்று அவர் என்னைக் கேட்டிருக்கலாமே! இப்போது அவர் மனம் வேறுபட்டு புலி இரை தேடி நடமாடும் பாலைநிலப் பெருமலை வழியில் சென்றிருக்கிறாரே! தலைவி தோழியை வினவுகிறாள்.