• Tue. May 7th, 2024

இலக்கியம்:

Byவிஷா

Sep 9, 2023

நற்றிணைப் பாடல் 246:

இடூஉ ஊங்கண் இனிய படூஉம்;
நெடுஞ் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்;
மனை மா நொச்சி மீமிசை மாச் சினை,
வினை மாண் இருங் குயில் பயிற்றலும் பயிற்றும்;
உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்தி, செய்பொருட்கு அகன்றனராயினும் பொய்யலர்,
வருவர் வாழி – தோழி! – புறவின்
பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ,
இன் இசை வானம் இரங்கும்; அவர்,
‘வருதும்’ என்ற பருவமோ இதுவே?

பாடியவர் : காப்பியஞ் சேந்தனார்
திணை: பாலை

பொருள்:

தோழீ! வாழி! நாம் கருதியதன் இடையிட்டு உவ்விடத்தே இனிய நிமித்தம் உண்டாகாநின்றன; நெடிய சுவரின்கணுள்ள பல்லியும் நம்பக்கத்திருந்து நம்மைத் தெளிவியாநின்றது; மனையகத்துள்ள பெரிய நொச்சிவேலியிலுயர்ந்த மாமரத்தின் கிளையிலிருந்து இனிமை பயப்பக் கூவுந்தொழிலிலே கை போதலான் மாட்சிமைப்பட்ட கரிய குயில் கூவுதலையுஞ் செய்யாநிற்கும்; நந்தலைவர் வலிமைமிக்க உள்ளத்துடனே பலவாய சுரத்தைக் கடந்து ஈட்டப்படும் பொருட்காக அகன்றனராயினும்; தாம் குறித்த பருவத்திலே பொய்யாராய் வருவர்காண்! கானத்துப் பொன் போலும் மலரையுடைய கொன்றையுடனே பிடாவும் மலராநிற்ப; இனிய குரலையுடைய மேகம் முழங்காநிற்குமாதலால்; அவர் வருவே மென்ற பருவம் இதுதான் போலும்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *