அம்பேத்கரும் மோடியும் என்ற நூலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதியது பெரும் சர்ச்சையான நிலையில், அதன் வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்கவில்லை.
‘அம்பேத்கரும் மோடியும் – சீர்த்திருத்தவாதிகள் சிந்தனையும் செயல்வீரர்களில் நடவடிக்கை’ என்ற புத்தகத்தை ப்ளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டது. இதற்கு இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் மோடியின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாக கொண்டது எனவும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு மோடி அரசு பல்வேறு நலதிட்டங்களை செய்துள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முத்தலாக் தடை சட்டம் போன்றவற்றால் பெண்கள் விடுதலை அடைந்துள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக இளையராஜா இவ்வாறு எழுதியுள்ளார் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்தனர். இதனை தொடர்ந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அம்பேத்கரும் மோடியும் நூல் வெளியீட்டு விழா நேற்று டெல்லி நேரு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இதில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று அந்த நூலை பெற்றுக்கொண்டார். மேலும், இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நடிகை குஷ்பு ஆகியோர் பங்கேற்ற நிலையில் முன்னுரை எழுதிய மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா பங்கேற்கவில்லை.