• Thu. May 15th, 2025

திருவிழாவில் பிரம்மாண்டமான சிலைகள் ஊர்வலம்

ByK Kaliraj

May 2, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்று வரும் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பிரம்மாண்ட வடிவிலான கடவுள்களின் திருவுருவ பொம்மைகளின் தாண்டவமாடிய காட்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.

சிவகாசியில் பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று முன்தினம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கைலாச பார்வத வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.

அப்போது சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்று வரும் திருவிழா நிகழ்ச்சியினை ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் தொடங்கி வைத்தார் அதன் முக்கிய நிகழ்வாக கேரளாவின் பாரம்பரிய மிக்க வண்ண மின் விளக்குகளால் வடிவமைக்கப்பட்டிருந்த 15 அடி உயரத்தில் நடனமாடும் விநாயகர், எழுந்தாடும் நாகக்கன்னி, நரசிம்மர் அவதாரம், நின்ற கோலத்தில் எழுந்தாடும் பிரம்மாண்டமான சிவனின் உடுக்கையுடன் ருத்ர தாண்டவமாடும் காட்சிகள் நிகழ்த்தப்பட்டது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பிரம்மாண்டமான ஊர்வலத்தை கண்டு களித்தனர்.

மேலும் கட்டைக்கால் ஆட்டம், மயிலாட்டம், காளை ஆட்டம் ஆடியகாட்சி அனைத்து தரப்பினர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து திருவிழா நடைபெற்று வரும் நிலையில், சூரசம்காரம், கழுவேற்றுலீலை, பொங்கலிடுதல், கயிறு குத்துதிருவிழா மற்றும் தேரோட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா சிவகாசி பகுதியில் களைகட்டி வருகிறது.