• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயம்

Byவிஷா

Feb 27, 2025

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் கொத்தமல்லி விவசாயத்தைப் பற்றிப் பார்ப்போம்

நம் அனைவருக்குமே ஏதாவது ஒரு சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு எந்தத் தொழிலைத் தொடங்கலாம்? குறைந்த முதலீட்டில் தொடங்கலாமா? என்றெல்லாம் பல கேள்விகள் எழும். இந்தப் பதிவல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய கொத்தமல்லி விவசாயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். வாருங்கள்.
கொத்தமல்லி இல்லாத இந்திய சமையலே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எந்த வகையான உணவுகளை சமைத்தாலும் இறுதியில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் தான் உணவு சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை நம் நாட்டு மக்களிடையே நிலவுகிறது. தினசரி உபயோகப்படுத்தப்படும் பொருட்களை உற்பத்தி செய்தாலோ அல்லது உருவாக்கினாலோ கண்டிப்பாக உங்களுடைய வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படுவது குறைவாக இருக்கும். அதோடு காய்கறி சந்தைக்குச் செல்லும் அனைவருமே நிச்சயமாக கொத்தமல்லிகளை வாங்குவார்கள். அதனால் தான் கொத்தமல்லிக்கான தேவை ஒருபோதும் குறையாது. கொத்தமல்லி பயிரிடுவதன் மூலம் நீங்களும் நல்ல லாபம் பெறலாம். உண்மையிலேயே விவசாயம் பற்றிய முழுமையான அறிவு இல்லாதவர்களும் கொத்தமல்லி பயிரிடலாம். ஒரு சிறிய இடத்தில் கூட கொத்தமல்லி பயிரிட முடியும். இவற்றை பயிரிட எவ்வளவு முதலீடு தேவை? எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
உங்களிடம் ஒரு ஏக்கர் நிலம் இருந்தாலே போதும். அந்த நிலத்தில் கொத்தமல்லி சாகுபடி தொடங்க குறைந்தது 10,000 ரூபாய் செலவாகலாம். ஆனால் இந்த பயிரிலிருந்து நீங்கள் 25,000 முதல் 30,000 வரை லாபம் சம்பாதிக்க முடியும். குறுகிய காலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 10 கிலோ வரை விதைகளை விதைக்கலாம். கொத்தமல்லி பயிருக்கு சொட்டு நீர் பாசனம் வழங்க வேண்டும். இதன் மூலம் இரண்டு மாதங்களில் உங்களுடைய பயிர் தயாராகிவிடும்.
அதுவே நிலம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் தகுந்த நடவடிக்கை எடுத்து கொத்தமல்லி பயிரிடலாம். ஆனால் அதற்கு உங்களுக்கு கொத்தமல்லி விவசாயம் பற்றிய போதுமான புரிதல் இருக்க வேண்டும். சிலர் தங்களுக்கு தேவையான கொத்தமல்லிகளை தாங்களே ஒரு சிறிய தொட்டியில் வளர்த்து பயன்படுத்தி வருவதை சில வீடுகளில் பார்த்திருப்போம். எனவே உங்களிடம் இருக்கும் இடத்தை பொருத்து கொத்தமல்லி பயிரிடலாம். கொத்தமல்லி அறுவடை செய்யப்பட்டவுடன் மீண்டும் பயிரிட முடியும். காய்கறி விற்பனையாளர்கள் உங்களிடம் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வார்கள் அல்லது நீங்களே சந்தைக்கு சென்று விற்பனை செய்ய முடியும். ஒரு கொத்து கொத்தமல்லி 5 ரூபாய்க்கு விற்கப்படும். குறிப்பாக கோடையில் கொத்தமல்லியின் விலை கனிசமாக அதிகரிக்கும். எனவே இந்த நேரத்தில் நீங்கள் பயிரிட திட்டமிட்டால், அதிக லாபம் ஈட்ட முடியும்.
குறிப்பு: 
உங்களுடைய வருமானம் என்பது நீங்கள் பயிரிடும் கொத்தமல்லியை பொருத்தும் அவற்றை விற்கும் அளவை பொருத்தும் மாறுபடலாம். அதோடு விவசாயம் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த ஐடியா மேலும் உதவிகரமானதாக இருக்கும். அதுவே நீங்கள் விவசாயத்திற்கு புதிது என்றால் அதற்கான ஆலோசனை பெற்று தொழில் தொடங்கவும். ஏனெனில் புதிதாக விவசாயம் செய்பவர்களுக்கு இந்த தொழில் கை கொடுக்காமல் போகும் வாய்ப்பும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.