கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதியன்று உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான வழிகாடடு நெறிமுறைகளின்படி, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்பகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த உயர்கல்வி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த ஆலோசனை நிகழ்ச்சி Mass Movement for Transformation (MMT) and NURTURE என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் துணையுடன் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி கூட்டரங்கில் வைத்து நடைபெற உள்ளது. எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், தெரிவித்துள்ளார்கள்.