கோடை வெயிலின் வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்புகளுக்கும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை தீவிரமாக செய்து வருகிறது.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் 6 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் வெப்ப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. மேலும் அக்னி வெயில்துவங்கியுள்ளதால் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்கோடை வெப்பத்தின் காரணமாக 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கி விடுமுறை அளிக்கவேண்டும். என கோரிக்கை விடுத்திருந்தார்.இந்நிலையில், வெப்ப அலை காரணமாக, பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.