• Fri. Mar 29th, 2024

கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் மளிகைப்பொருட்கள்..!

Byadmin

Jul 3, 2022

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில், குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி வளாகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வகைகள் போன்றவை தரமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருமயம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துடன் இணைந்து கூட்டுக் கொள்முதல் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட சத்தான கருப்புக்கவுனி அரிசி, திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தயாரிப்பான அர்த்தநாரீஸ்வரா என்ற அரிசி வகைகள், இதர நிறுவனங்களின் தயாரிப்புகளையும் பார்வையிட்டார். அங்காடிகளில் விற்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் தரமான தயாரிப்புகளை வெளிச் சந்தைகளைவிட, குறைந்த விலையில் விற்க வேண்டும். இந்த தயாரிப்புகளை மக்களிடம் உரிய வகையில்கொண்டு சேர்க்க வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய பொதுமேலாளர் (விற்பனை) ம.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி பொது மேலாளர் (திட்டம்,திட்டமிடல்) மோ.ஹேமா, இணையதுணை பொது மேலாளர் (உட்தணிக்கை) கோ.தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *