• Sat. Feb 15th, 2025

ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா

BySeenu

Jan 22, 2025

கோவையில் ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிறுவனர் தினவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை, ஜி.ஆர்.ஜி.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கல்லூரி அரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் G. ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி ரங்கசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக அன்னபூர்ணா உணவகங்களின் தலைவர் D.சீனிவாசன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வாக சந்திரகாந்தி அம்மையார் நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அவர்,கடின உழைப்பும் நம்பிக்கையும் மட்டுமே வாழ்க்கையில் உயர்வை தரும் என கூறினார்.

தனது ஆரம்ப கால வாழ்வியல் அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர்,பெண்கள் தங்களை சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கு கல்வி அவசியம் என சுட்டி காட்டினார்.

இதனை தொடர்ந்து ஜி.ஆர்.ஜி.நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது கங்கா மருத்துவமனை தலைவர் மருத்துவர் S.ராஜசேகருக்கு வழங்கப்பட்டது.

விருதை பெற்று கொண்ட அவர் தமது வாழ்த்துரையில், தற்போது கல்வி பயிலும் மாணவிகள் நவீன தொழில் நுட்ப உலகில் ஏராளமான சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருப்பதாக கூறிய அவர், இதில் கல்வி பயின்று வாழ்வில் முன்னேற்றம் காண்பதை மட்டுமே தங்கள் இலட்சியமாக கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

உயர்ந்த எண்ணங்களும் அதற்கேற்ற உழைப்பும் அவசியம் என்பதை இன்றைய கால மாணவர்கள் உணர வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ.இன்ஸ்ட்டியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ் உடன் இணைந்து கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ஜி.ஆர்.ஜி.சென்டர் ஆஃப் எக்சலென்ஸ் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை கல்வி துவக்க விழா நடைபெற்றது.

இதனை வால்வோ இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் கமல் பாலி துவக்கி வைத்தார்.அப்போது மாணவிகளிடம் பேசிய அவர்,உலக அளவில் லாஜிஸ்டிக்ஸ் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்த துறையில் நமது இந்தியா சாதிப்பதற்கு இது போன்ற துவக்கங்கள் நல் வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஜி.ஆர்.ஜி.அறக்கட்டளை நிர்வாகிகள் கிருஷ்ணம்மாள் கல்லூரி துறை தலைவர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.