கஞ்சா கடத்தல் வழக்கில் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி மதுரை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை உசிலம்பட்டி பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக உசிலம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது கருக்கட்டான்பட்டி ரோடு பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜன் (வயது 35), கர்ணன் (55), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
அரசு தரப்பில் வக்கீல் விஜயபாண்டியன் ஆஜரானார். விசாரணை முடிவில், மேற்கண்ட 2 பேர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹர குமார் நேற்று தீர்ப்பளித்தார். அபராத தொகை செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.