மதுரை, கே.புதூர் மகாலட்சுமி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜ் (59). மதுரை, அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:
ஐயர் பங்களா, கண்ணனேந்தல் சாலை, அன்பு நகரைச் சேர்ந்தவர். எல்ஐசியில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற சண்முகம் என்பவரிடம், நான் எல்ஐசி பாலிசி எடுத்து வந்தேன். அந்த வகையில் நன்கு பழக்கமான சண்முகம், 2019 ஜனவரியில் ‘ரைட் ஜூவல்லர்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குனராகவும், அதில் முன்பணம் செலுத்தினால் குறைந்த விலையில் தங்ககாசு கொடுப்பதாகவும், ஆசை வார்த்தை கூறினார்.
அவரது, பேச்சை நம்பி நான் பல தவணைகளாக ரூ.14.25 லட்சம் நேரடியாகவும், காசோலைகள் வாயிலாகவும் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட சண்முகம், நான்கு ரசீதுகள் கொடுத்தார். ஆனால், தங்ககாசுகளையோ, பணத்தையோ கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், கடந்தாண்டு ஜன.,7ம் தேதி மதுரை மாநகர குற்றப்பிரிவில் சண்முகம் மீது புகாரளித்தேன். அதனால், ஆறு மாத காலத்தில் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். சொன்னபடி மீண்டும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்திருந்தார். புகாரை பெற்ற போலீசார், சண்முகம் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.