Digital Arrest மற்றும் Part time job Fraud சைபர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் வைத்து கைது செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்ட சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS உத்தரவை தொடர்ந்து, சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் விசாரணையில் Digital arrest மற்றும் Part time job fraud சம்பந்தப்பட்ட இரு வழக்குகளில் குற்றவாளிகள் மகாராஷ்டிராவில் இருப்பது தெரியவந்தது. அவர்களை உடனடியாக கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவுபடி, சைபர்கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ் மேற்ப்பார்வையில் சைபர் குற்றபிரிவு காவல் ஆய்வாளர் சொர்ணராணி தலைமையில் உதவி ஆய்வாளர் அஜ்மல் ஜெனிப், சிறப்பு உதவி ஆய்வாளர் செலின், தலைமை காவலர் பிரின்ஸ் பேரின்ப நாயகம், காவலர்கள் அகஸ்டின், சாபு, அனில் குமார், கில்பர்ட் ராஜ் ஆகியோர் மகாராஷ்டிரா சென்றனர்.
இருவழக்குகளில் தொடர்புடைய மகாராஷ்டிராவை சேர்ந்த விலாஸ் சாவன் என்பவரின் மகன் அதுல் விலாஸ் சாவன்(27), டயானேஷ்வர் சாவன்ட் என்பவரின் மகன் மோரேஷ்வர்(43), காலித் சித்திக் என்பவரின் மகன் தவ்பிக் காலித் சித்திக்(38), மஸ்ரூர் என்பவரின் மகன் ரம்சான் மஸ்ரூர் ஷேக்(28) ஆகியோரை மகாராஷ்டிராவில் வைத்து கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறப்பாக செயல்பட்டு நான்கு பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள்.