முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடும் விதமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது. அதில் ஒன்றான தமிழ்நாடு அரசின் எழுத்தாளர்-கலைஞர் குழுவின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு முத்தமிழ் தேர் தொடக்க விழா கன்னியாகுமரியில் தொடங்கியது தொடர்ந்து முத்தமிழ் தேர் வாகன ஊர்தி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்கள் வழியாக அடுத்த மாதம் 4-ந் தேதி சென்னையை சென்றடைகிறது.
இன்று முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிவகங்கை திருப்பத்தூர் வந்தடைந்தது. சிவகங்கை நகரின் நுழைவுவாயிலில்
கூட்டுறவுத்துறை அமைச்சரும், எழுத்தாளர்- கலைஞர் குழுவின் தலைவருமான அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் முத்தமிழ்த்தேரை கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிலம்பம் பொய்க்கால் குதிரை கரகம் தாரை தப்பட்டம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். மதுரை சாலையிலிருந்து அரண்மனை வாசல் வரை ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது. இந்த ஊர்தியில் கலைஞரின் பன்முக ஆற்றலையும், தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களை காட்சிப்படுத்தி இருந்த முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியை பொதுமக்கள் பள்ளி மாணவியர் கண்டு களித்தனர். ஊர்தியின் உள் பகுதியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியை ஒட்டி கிராமிய கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கலைஞர்களும் பங்கேற்றனர்.