சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விஜய் போன்ற பிரபல நடிகர்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்பொழுது நடிகர் என்ற முத்திரையோடு மட்டும் வருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் கொள்கையை முன்நிறுத்தி வரவேண்டும் என கூறினார்.
மேலும், பாரம்பரிய கட்சியான அதிமுக தற்போது ஆளுமை திறமையுள்ள தலைமை இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் தற்போது தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்கள், சரித்திர விபத்தில் பதவிக்கு வந்தவர்கள் என்றும் விமர்சனம் செய்தார்.
அதிமுகவிற்கு தலைமை ஏற்க சசிகலாவிற்கு வாய்பிருக்கிறது என்ற கார்த்தி சிதம்பரம், அதனை தொண்டர்கள் ஏற்று கொண்டாலும், மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
பொது சிந்தனை இல்லாமல்
ஒரு சமுதாயத்தை மட்டும் மையப்படுத்தி இருக்கும் பாமக போன்ற கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லாமல் இருப்பதே நல்லது என்றும், எல்லை பாதுகாப்பு படையை மாநில எல்லைக்குள் விரிவுபடுத்தி, தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளை பாஜக பறித்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
மோடியும், நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல் டீசல் குறையவே குறையாது என்று உறுதிபடக் கூறினார்.