சிவகாசி அருகே அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான கணேஷ்வரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

வெடி விபத்தின் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெடியின் அதிர்வு ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பதட்டம் அடைந்தனர். ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது. சிவகாசிதீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு அடுத்தடுத்த அறைகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
விபத்து குறித்து நடத்திய விசாரணையில் வானில் சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லாத நிலையில் உரிய அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்ததும், பேன்சி ரக பட்டாசு தயாரிக்க கலவை செய்த ரசாயனம் மூலப் பொருட்களை மீதம் வைத்துவிட்டு சென்ற நிலையில் அந்த ரசாயன மூலப்பொருள் நீர்த்து தானாகவே வெடித்துள்ளதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இசசம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்