• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்

Byவிஷா

Jun 30, 2025

டெல்லியில் நிலவி வரும் கடுமையான காற்று மாசுபாடு காரணமாக, நாளை முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் வாகனங்களால் காற்று மாசுபாடு அடைகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பெருமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை ஜூலை 1ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. காலாவதியான வாகனங்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவித்துள்ளது.
டெல்லியில் காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி காலாவதியான வாகனங்கள் எந்த மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், ஜூலை 1ம் தேதி முதல் டெல்லியில் எரிபொருள் வழங்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக டெல்லியில் காலாவதியான வாகனங்களை பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் காற்று தர மேலாண்மை கமிஷன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்த உத்தரவு நாளை ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெட்ரோல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.5000 , 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.இந்த வாகனங்கள் பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருந்தாலோ அல்லது பெட்ரோல் ‘பங்க்’களில் நுழைந்தாலோ உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இதற்காக 500க்கு மேற்பட்ட ‘பங்க்’களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.