மெக்சிகோ நாட்டில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களால் 13 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிக்கோ நாட்டில் திடீரென அடுத்தடுத்து 20 குழந்தைகள் வரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அதில் 13 குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்தது. இது குறித்து விசாரிக்கப்பட்ட பரவலான விசாரணையில், குழந்தைகள் பலியான சம்பவத்தில், காலாவதியான குளுக்கோஸ் பாக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று நாடு முழுவதுமிருக்கும் மருத்துவமனைகளுக்கு மெக்ஸிகோ சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதுவரை குழந்தைகளின் உயிரிழப்புக்கான உண்மையான காரணம் கண்டறியப்படாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் மரண அறிக்கையில், அனைத்து விதமான நோய் எதிர்ப்பு மருந்துகளையும் தகர்க்கும் க்ளெப்சியெல்லா ஆக்ஸிடோகா என்ற பாக்டீரியா காரணமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறந்த குழந்தைகள் அனைவருமே ரத்தநாள தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், இதுவரை 20 குழந்தைகளுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு, அதில் 13 குழந்தைகள் மரணமடைய, மற்ற குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.