கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு மண்டல பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், கட்டுப்பாடுகள் நீங்கும் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. துணை செயலர்கள் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50 சதவீதம் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணி செய்ய வேண்டும். சுழற்சி முறையில், இது அமல்படுத்தப்படும். இருப்பினும், வீடுகளில் இருந்து பணிபுரிவோர், தொலைபேசியில் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். அலுவல் கூட்டங்கள் கூடிய மட்டும் காணொலி மூலம் நடத்தப்பட வேண்டும்.
பார்வையாளர்களுடனான சந்திப்புகளை, மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். பணியிடங்கள் சானிடைசர் தெளித்து தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். இந்த விதிமுறைகள் ஜனவரி 31 வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.