“திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்” என, டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
திருச்சி திருவெறும்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது
“வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக, ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ (எடப்பாடி பழனிசாமி) மாதிரி செயல்படக் கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள்.
ஜாதி, மத பேதமில்லாத அதிமுகவில் ஜாதி, மத அரசியல் செய்து எல்லோரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி.பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக செலவு செய்து பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச் செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். ஏன், திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச் செயலாளராக வந்துவிட முடியும்.
இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும்” என்றார்.