திண்டிவனம் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலைக்கு செய்து கொண்டதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு திமுக அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
“ திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேனியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட திமுகவின் நீட் ரகசிய அரசியல் குறித்து நான் பேசிய நிலையில், நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில், ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகியும் இன்று வரை அவர்களுக்கு திமுக அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த திமுக அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
அந்த நீட் ரகசியத்தை உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், திமுக பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.